நாங்கள் மலேசியா செல்கிறோம் என்று எங்கள் தோழர்களிடம் கூறியபோது, குழந்தையுடன் செல்வதால் ட்வின் கோபுரங்கள் போன்ற சுற்றுலா தளங்கள் செல்ல போகிறீர்களா என்று கேட்டார்கள். நாங்கள் எப்பொழுதும் போல அந்த நாட்டில் உள்ள காடுகளுக்கு தான் செல்ல போகிறோம் என்றவுடன் ஆச்சர்யமாக பார்த்தார்கள். அதிலும் எங்கள் தோழி சரண்யா என்னது மலேசியாவில் எல்லாம் காடுகள் இருக்கிறதா என்று ஆச்சர்யமாக கேட்டாள். உலகம் ஒவ்வொருவரின் பார்வையிலும் மிகவும் வித்தியாசமாக தெரியும் என்பதால் எங்களுக்கு உலகம் முழுவதும் காடு , அதை நாம் எவ்வளவு அழித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தான் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும். தேசிய பூங்கா என்று உலகம் முழுவதும் சில இடங்களை விட்டு வைத்திருப்பதால் தான் இன்னமும் காடுகள் என்று ஒரு சிறிய பகுதியாவது காப்பாற்றப்பட்டு வரப்படுகின்றன.

மலேசியாவில் எங்களுக்கு உலகத்தில் உள்ள பெரிய மலரான ரஃப்லேசியா (Rafflesia) மற்றும் தாவரக் குடுவை செடிகள் (Pitcher plants) பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் முதலில் காமெரூன் ஹைலேண்ட்ஸ் தான் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். அப்புறம் சமூக வலைதளங்களில் இந்த இடம் பெரிய சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுவிட்டது என்று படித்ததால், தேசியப்பூங்காவிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். மலேசியாவில் உள்ள பழமையான காடு டாமன் நகராவில் தான் உள்ளது என்று தெரிந்தவுடன் அங்கேயே செல்லலாம் என்று அங்கே தங்குவதற்கான ஏற்பாடுகளை ஆன்லைனில் ஏற்கனவே செய்திருந்தேன்.
பென்டோங் – டாமன் நெகரா 3-4 மணி நேரம் பயணம் என்பதால் செல்லும் வழியில் நன்றாக ஊரையும் கம்பிகளில் உட்காரும் பறவைகளையும் பார்க்கலாம் என்று நான் உண்பதற்கு வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு காரில் முன் சீட்டில் சென்று அமர்ந்தேன்.டாமன் நெகரா அந்த நாட்டின் பிரபலமான தேசிய பூங்கா என்பதால் சிறிது நேரத்திலேயே திசை பலகை வர ஆரம்பித்து விட்டதால் பாதை கண்டுபிடித்து செல்ல எந்த சிரமமும் இல்லை. ஆனால் கம்பியில் தான் ஒரு பறவை கூட அமரவில்லை, நாங்களும் மலேசிய பறவைகளில் ஊர் பறவைகளை இவ்வாறு எளிதாக பார்த்துவிடலாம் என்று நினைத்தால் எங்கேயும் அப்படி பார்க்க இயலவில்லை. ஆங்காங்கே ஒரு கழுகு மட்டும் கண்ணில் படும். அதுவும் பாம்பு கழுகு தான்.

மற்றபடி தகைவிலான் பறவைகள் மட்டுமே நிறைய பறந்து கொண்டிருந்தன. ஒரு பாலத்தில் இறங்கி அந்த பெரிய ஆற்றையும், உயர்ந்த மரங்களையும் பார்த்து ரசித்தபின் டாமன் நெகரா மிக அருகே செல்லும் வரை பாமாயில் மரங்கள், அதன் பிறகு ஒரு வகை ஊடுருவும் ஃபெர்ன் மட்டுமே இருந்ததால் புலம்பிக்கொண்டே நாங்கள் தங்கும் இடம் சென்றடைந்தோம்.

தங்கும் அறை 2மணிக்கு தான் தயாராகும் என்று கூறியதால் நாங்கள் மதிய உணவு உண்டுவிட்டு அருகில் இருந்த ஹார்ன்பில் வேலி சென்றோம். திரும்பி வந்த பின்பும் அறை தயாராகாததால் , ஊழியர்களிடம் கொஞ்சம் கோபப்பட்டபின் ஒரு அறையை உடனே கொடுத்தார்கள். தங்கிய இடம் முழுவதும் ஒரே வகை மரம் தான் வைக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்த மரங்கள் காய்த்திருந்ததால் எல்லா மரங்களிலும் கசகசவென்று பறவைகள். ஆனால் சும்மா பார்த்தால் மரத்திலிருந்து சத்தம் வந்ததே தவிர எந்த பறவையையும் ஒழுங்காக பார்க்க இயலவில்லை. கொஞ்ச நேரம் உற்று பார்த்ததில் தேன் சிட்டு, மலர் கொத்தி, குட்டை கிளி வகை பறவைகள் அங்கே இருக்கின்றன என்று கண்டுபிடித்தோம். இந்தியாவில் இருக்கும் குட்டைகிளி வகை மிக அழகு என்றால், இங்கே உள்ள குட்டை கிளி பளபளவென்று ஏகப்பட்ட வண்ணங்கள் கொண்டிருந்தன.

வினோத் அந்த பறவைகளை படம் பிடித்து கொண்டிருந்த நேரத்தில் , நானும் குழந்தையும் தங்கும் அறைக்கு சென்று தயாராகிவிட்டு தேசிய பூங்காவை ஒரு எட்டு போய் பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம். டாமன் நெகரா நதிக்கு அருகே வண்டியை பார்க் செய்துவிட்டு படகில் மறுபுறம் செல்லலாம் என்று பார்த்தால் ஒரு இடத்திலும் படகோட்டி இல்லை. ஆற்றின் ஒருபுறம் உணவு கடைகள், படகுகள் இருந்தன, மறுபுறத்தில் தேசியபூங்காவும் அதனோடு சேர்ந்து தங்கும் விடுதியும் உள்ளது. உணவு கடைகள் அனைத்தும் தண்ணீர் மேலே மிதக்கும் வகையில் அமைந்திருந்ததால், சிறிய கட்டைகளில் நடந்துதான் கடைகளை அடைந்தோம். பல கடைகளில் கேட்ட பின்பும் படகோட்டிகள் கிடைக்காததால் திரும்பி செல்லலாமா என்று நினைத்தபோது ஒரு படகோட்டி வந்தார்.

இந்த மாதிரி ஆறுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், நீரின் சீற்றம் நன்றாகவே தெரியும். காட்டில் மழை பெய்யும் நேரத்தில், உடனே இங்கே நீரின் அளவு அதிகமாகிவிடும் என்று புரிந்தது. ஒரு நிமிடத்திற்குள் எதிரே உள்ள கரைக்கு சென்று விட கூடிய படகு பயணம் தான் என்றாலும் அந்த நதியை படகில் இருந்து பார்க்கும்போது பிரமிப்பாக தான் இருந்தது.

பொதுவாக ஆற்றங்கரை மணலில் நிறைய பட்டாம்பூச்சிகளை பார்க்கலாம். ஆனால் இங்கே ஒரே ஒரு பட்டாம்பூச்சி தான் கண்ணில் பட்டது. அதை படம்பிடித்துவிட்டு படிகள் ஏறி சென்றால் டாமன் நெகரா தேசிய பூங்காவின் உள்ளேயே இருக்கும் தங்கும் விடுதி முதலில் வந்தது. ஏறத்தாழ 100 காட்டேஜ் இருக்குமளவுக்கு உள்ள ரிசார்ட் என்றாலும் மிகவும் அமைதியாகவே இருந்தது. காட்டுக்கு உள்ளே சென்று பறவைகளை கண்டுபிடிப்பதைவிட வெளியே இந்த மாதிரி இடங்களில் நிறைய பறவைகளை பார்க்கலாம் என்று அந்த இடத்தில் சுற்றினால், அங்கே இந்தியாவில் பார்க்கும் அதே வண்ணாத்திக்குருவி (Oriental magpie robin) எல்லா இடத்திலும் குதித்துக்கொண்டிருந்தது. பட்டாம்பூச்சி பார்த்தால் அதே சாக்லேட் பான்சி (Chocolate Pansy) தான் பறந்துகொண்டிருந்தது.

நாங்கள் தேசிய பூங்காவிற்கு டிக்கெட் வாங்கும் இடத்திற்கு சென்றோம். வெறும் RM 1.00 தான் உள் நுழையும் கட்டணம், RM 5.00 கேமராவிற்கான கட்டணம். அதுவும் ஒரு தடவை எடுத்துவிட்டால் நாங்கள் திரும்பி செல்லும் வரை அதே டிக்கெட்டை காட்டிக்கொள்ளலாம் என்று கூறியது என் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்று மறுபடியும் கேட்டு கொண்டேன். இருட்டுவதற்குள் வெளியே வந்துவிடவேண்டும் அவ்வளவு தான் என்று அந்த அலுவலர் கூறியவுடன், இன்னும் சில மணிநேரம் இருட்டுவதற்கு இருந்ததால், ஏதாவது ஒரு சிறிய ட்ரெயில் நடந்து விடலாம் என்று அங்கே இருந்த மேப்பை பார்த்து ஒரு பாதையை தேர்வு செய்தோம்.

காட்டு பாதைக்கு செல்லும் வரை வண்ணாத்திக்குருவி பறவையை தவிர வேறு எந்த பறவையும் இல்லை. காட்டுக்குள் நுழைந்தபின் வண்ணாத்திக்குருவி பறவையை காணவில்லை, மற்ற பறவைகளின் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. என்னடா இது, பெரிய எல்லை கட்டுபாடு இருப்பது போல இந்த பறவைகள் நடந்துகொள்கின்றனவே என்று சிரிப்பாக இருந்தது. ட்ரெயில் முழுவதும் ரயில் தண்டவாளம் போல இரும்பில் பாதை போட்டிருப்பதை இதுவே முதல் முறை பார்க்கிறோம்.

மாலை நேரத்தில் மழைக்காடுக்குள் சென்றவுடன் ரொம்ப இருட்டாக இருந்தது. திடீரென்று ஒரு பட்டாம்பூச்சியோ , பறவையோ பறக்கின்றதை பார்ப்போம், ஆனால் அதை என்னவென்று கண்டுபிடிக்க முடியாது. நிறைய ஆர்க்கிட் செடிகளை பார்த்தேன், ஆனால் எதுவுமே பூக்கவில்லை. மழைக்காட்டை ரொம்ப வறண்டு, மழையே இல்லாமல் பார்க்கிறோமே என்று எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நாங்கள் சென்ற மாதம் தான் மழை மிகவும் குறைவாக பெய்கின்ற மாதம் மற்றும் நல்ல மழை பெய்தால் குழந்தையை வைத்துக்கொண்டு நடப்பதற்கு சிரமம் என்று எனக்கு தெரிந்தாலும் கொஞ்சம் மழை பெய்தால் நன்றாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது.
கொசு வேறு நன்றாக கடிக்க ஆரம்பித்துவிட்டது. மறுநாள் காலையில் மறுபடியும் இந்த பாதை எல்லாம் தான் செல்ல போகிறோம் என்பதால் நாங்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். ரொம்ப தாகமாக இருந்தவுடன் உள்ளே இருந்த உணவு விடுதியில் ஜூஸ் குடிக்கலாம் என்று சென்றமர்ந்தோம். மெனு கார்டில் விலையை பார்த்தவுடன், அங்கே தங்குகின்ற வெள்ளைக்காரர்களுக்கு ஏற்ப விலை வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு புரிந்துவிட்டது.
அந்த விலைக்கு நாங்கள் குடித்த ஜுஸ் ரொம்ப சுமாராக இருந்தது. திரும்பி செல்வதற்கு படகு இருக்குமா என்று யோசனையில் சென்றால், நாங்கள் படியிறங்குவதை மறுகரையில் இருந்து ஒருவர் பார்த்துவிட்டு உடனே படகை எடுத்து வந்துவிட்டார். இதுதானே அங்கே உள்ள ஆட்டோ !
இரவு தங்கும் விடுதியில் என்ன உணவு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து வருகிறேன், என்று நான் வெளியே வந்தபோது இடி இடிக்கும் சத்தம் கேட்டது.

பஃபே உணவு வைத்திருந்ததை உண்ணுகின்ற அளவுக்கு எங்களுக்கு பசி இல்லாததால் எளிய உணவை வாங்கிக்கொண்டு நான் அறைக்கு திரும்பி வரும்போது மழை தூற ஆரம்பித்தது. நான் ஓடிவந்து வினோத்திடம் மழை பெய்கிறது என்று கூறினேன். சில நிமிடத்திற்குள்ளேயே தவளைகளின் சத்தம் கேட்க ஆரம்பித்தது. வினோத் முதலில் வெளியே சென்று கொஞ்சம் தேடிவிட்டு வருகிறேன் என்று சென்றார். தவளைகளை கண்டுபிடித்துவிட்டேன், நீங்களும் வாருங்கள் என்று என்னையும் மகளையும் திரும்பி வந்து கூட்டி சென்றார்.
தரை முழுவதும் பறவைகள் சாப்பிட்டு போட்ட பழங்கள் கிடந்ததால் , மழையில் தரை நீலமாக மாறி இருந்தது. தவளைகளை வடிகாலில் பார்த்தோம்.

தவளைகள் பலூன் மாதிரி தொண்டையை உப்பி சத்தம் போட்டுக்கொண்டிருந்ததை பார்க்க எனக்கே வேடிக்கையாக இருந்தது, அப்புறம் எங்கள் மகளுக்கு கேட்க வேண்டுமா ? frog frog என்று அந்த பயணம் முடியும் வரை இரவில் அவள் தினமும் கேட்டுக்கொண்டே இருந்தாள். மழை பெய்ததால் மறுநாள் காட்டுக்குள் செல்வது இன்னும் நன்றாக இருக்கும் என்ற உற்சாகத்தில் நாங்கள் அந்த நாளை முடித்துக்கொண்டோம்.