கன்னியாகுமரி நேச்சர் பௌண்டேஷன் ஆரம்பித்த பின் வேலை பளு காரணமாக நீண்ட பயணம் சென்று சில வருடங்கள் ஆகி விட்டதால் மறுபடியும் நீண்ட பயணங்கள் செய்ய ஆரம்பிப்போம் என்று முடிவு செய்தோம். பல இடங்களை பரிசீலித்து , மலேசியா செல்லலாம் என்று முடிவு செய்தோம். மலேசியாவில் சபா பக்கம் செல்லலாமா என்று யோசித்தோம், அப்புறம் மலேசியாவிலேயே உள்ள தேசிய பூங்காக்களை முதலில் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். நிறைய திட்டம் போட்டு கடைசியில் டாமன் நெகரா என்ற தேசிய பூங்கா செல்லலாம் என்று முடிவு செய்தோம். மலேசியாவில் குலாலம்பூர் ஏர்போர்ட்டில் இருந்து 1.30 மணி தூரத்தில் இருக்கும் ஜன்டா பைக் , பென்டோங், பஹாங் (Janda Baik,Bentong, Pahang) என்ற இடத்திற்கு முதலில் செல்லலாம், அப்புறம் அங்கே இருந்து டாமன் நெகரா சென்றால் பயணம் கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று திட்டமிட்டோம்.
நாகர்கோவில் – திருவநந்தபுரம் ஏர்போர்ட் பொதுவாக 1.30 மணி நேர பயணம், சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் நிறைய சாலை வரியும் கொடுத்து 2.30 மணி நேரத்தில் விமான நிலையம் சென்று அடைந்தோம். வினோத்தையும் என்னையும் பொறுத்த வரையில் விமான நிலையம் ஒரு பெரிய ஹைப் கொடுக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட். அதுவும் போர் என்று வேறு சொல்லிக்கொண்டிருந்தால் ஏதோ நான் குழந்தைக்கு உள்ள தயிர் சாதம், 123 புத்தகங்களுடன் தான் ஏதோ வெடிகளை எடுத்து செல்வது போல பாதுகாப்பு என்ற பெயரில் எவ்ளோ சோதனைகள்.

விமானத்தில் செல்லும்போதே சூரியன் உதிப்பதையும் , வானம் வண்ணம் மாறியதையும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. வினோத் பொதுவாக இவற்றையெல்லாம் கைபேசியில் அழகாக படம்பிடிப்பார், துரதிஷ்டவசமாக கிளம்புமுன் அவருடைய போன் பழுதாகிவிட்டதால் இவற்றையெல்லாம் படம்பிடிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தத்துடன் இருந்தார். புது இடங்களுக்கு வரும்போது எப்பொழுதும் மிகவும் உற்சாகமாக ஊர் எப்படி இருக்கிறது என்று மிகவும் ஆர்வமாக பார்ப்பேன், ஆனால் இங்கே விமானம் தரை இறங்கும் முன்பே மேலே இருந்து கண்ணுக்கு தெரிந்ததெல்லாம் பாமோலிவ் மரங்கள் மட்டும் தான் என்பது மனதிற்கு சங்கடமாக இருந்தது. இந்தியா ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டன்களை மற்ற நாடுகளிடம் இருந்து வாங்குகிறது. இதில், பாமாயில் 9 மில்லியன் டன்கள், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இரண்டும் சேர்த்து மீதமுள்ள 6 மில்லியன் டன்.

நாம் மற்ற நாட்டு மழைக்காடுகளை அழித்து சாக்லேட், சோப் செய்வது மிகவும் தவறான காரியம், ஆனால் இவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களும், அரசாங்கங்களும் சேர்ந்து திட்டமிட்டு பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி வருவதால் நம் மாதிரி மக்கள் இந்த செயல்களை வருத்தத்தோடு பார்க்கத்தான் முடியுமே தவிர வேறு எந்த செயலும் செய்ய இயலாது. மலேசியா முழுவதும் பாமாயில் தான் என்று முன்பே தெரிந்தாலும் அவற்றை கண் முன் பார்க்கும்போது திகைப்பாகவே இருந்தது.
வாடகைக்கு நாங்களே ஓட்டும் வண்டியை எடுத்து வெளியே வந்து பென்டோங் போவதற்கு கூகுள் மேப்ஸ் ஆன் செய்து விட்டு ஊர் சாலைகளை பார்க்க ஆரம்பித்தோம். பறந்து விரிந்த சாலைகள், வித விதமான கார்கள் போவதை பார்த்துக்கொண்டே சாலையோர செடிகளை பார்க்க ஆரம்பித்தோம். இவ்வளவு அழித்த பின்பும் அவ்வளவு மழை காரணமாக பச்சை பசேல் என்று இருந்தது. உழவாரக் குருவி , தகைவிலான் வகை பறவையினங்களை விமான நிலையத்தில் இருந்தே நிறைய பறப்பதை பார்த்துக்கொண்டே சென்றோம். உணவு பொருட்கள் வாங்க நிறுத்திய கடையில் வினோத் பைனாகுலர் எடுத்து பறவைகளை பார்க்க ஆரம்பித்தார். பிரபலமான batu குகை வரும்போது நாங்கள் பாதை தவறி , ஊருக்குள் மறுபடியும் இரண்டு சுற்று சுற்றி , அதிக டோல் கொடுத்து ஒருவழியாக பாதையை கண்டுபிடித்து ஊருக்கு வெளியே செல்ல ஆரம்பித்தோம்.
நாங்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றதால் செல்லும் வழியெல்லாம் நிறைய டூரிஸ்ட் மக்கள் பைக், கார்களில் சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் தங்க புக் செய்திருந்த இடம் அமைதியாகத்தான் இருந்தது.

அப்பாடி, நாம் டூரிஸ்டாக வந்தாலும் டூரிஸ்ட் நிறைய பேர் வரும் இடத்திற்கு வராமல் வந்ததால் நன்றாக பறவைகள் பார்க்கலாம் என்று நாங்கள் தங்கிய இடத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தோம். சாக்லேட் பான்சி, கருங்குயில் தவிர முதலில் எதுவுமே பெரிதாக கண்ணில் படவில்லை. தூரத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றில் நிறைய பறவைகளின் ஒலி கேட்டது, ஆனால் ஒன்றுமே கண்ணுக்கு தெரியவில்லை.

இரவு நேர உணவுக்கு சீக்கிரமாகவே சொல்லிவிடுங்கள் என்று கூறியதால், மெனு கார்டில் எதுவும் புரியாததால் அதில் உள்ள படத்தை பார்த்து ஒன்றை காட்டிவிட்டு அங்கே இருந்த கஸிபோ கீழே சென்று அமர்ந்தோம். மெல்லிய தூறலுடன், இதமான சூரிய வெளிச்சத்துடன் அழகாக இருந்த அந்த வானிலையில் அருகே உள்ள ஒரு மரத்தில் புல்புல், ஸ்டார்லிங் போன்ற பறவைகள் வர ஆரம்பித்தன. பெரிய அத்தி மரமொன்றில் நன்றாக பழங்கள் இருந்ததால் புறா,குக்குறுவான் நிறைய பறந்து கொண்டிருந்தன, ஆனால் எல்லாமே இருட்டாகவே இருந்தது. படம்பிடித்து பார்த்தால் அழகிய வண்ணத்தில் உள்ள புறாக்கள் இருக்கின்றன என்று தெரிந்தது.

தங்கும் இடத்திற்கு வெளியே உள்ள இடங்களும் நன்றாக இருந்ததால், அங்கேயும் நடந்து சென்று சுற்றுவட்டாரங்களை பார்த்து கொண்டிருந்தோம். திடீரென்று பைக்குகள் சர் சர்ரென்று வர ஆரம்பித்தன. ஒரு பெரிய கும்பலே நாங்கள் தங்கிய ரிசார்ட்டிற்கு வந்துவிட்டதை பார்த்தவுடன், அவ்ளோ தான் இந்த அமைதியான இடம் கலவரமாக போகிறது என்று நினைத்தேன். ஆனால் புர் புரென்று பைக் சத்தம் தவிர அப்புறம் நிறைய ஆட்கள் வந்தாலும் அவர்கள் எல்லோரும் அறைக்குளேயே இருந்ததால் எங்களுக்கு வெளியே எந்த தொந்தரவும் இல்லை.

மாலை நேரம் புறா, குக்குறுவான், வகைகள் சிலவற்றை பார்த்தோம். அந்த இடத்தில் உள்ள சில பறவைகளை தாய்லாந்தில் பார்த்திருக்கிறோம், ஆனால் பெரும்பாலான பறவைகள் எங்களுக்கு புதிதாக இருந்ததால் ஆர்வமாக அவற்றை பார்க்க சுற்றினோம்.

இரவு நேர உணவு கொண்டு வந்தார்கள் , ஒரு ஆளுக்கு தான் அந்த உணவு என்று சொல்லி இருந்தார்கள், நான் எங்களுக்கு அவ்வளவு போதும் என்று தான் ஆர்டர் கொடுத்திருந்தேன். உணவின் அளவை பார்த்தால், இந்த ஊரில் எவ்வளவுடா சாப்பிடுகிறீர்கள் என்றிருந்தது. உணவை உண்ட பின் ஆந்தை, இரவு பக்கி ஏதாவது கண்ணில் படாதா என்று ஒரு நடை சென்றோம். ஆனால் பட்டாசு சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன, என்னடா இது பட்டாசு எல்லாம் வெடிக்கிறார்கள் என்று அங்கே உள்ள ஊழியரிடம் கேட்டால் அன்று Vesak day என்ற புத்திச திருநாளாம். முழு நிலா அன்று அவர்கள் கொண்டாடும் இந்த பண்டிகை நாளென்று தான் நாம் கிளம்பி வந்திருக்கிறோமா என்று எண்ணிக்கொண்டே தூங்க சென்று விட்டோம்.
மறுநாள் அதிகாலையிலேயே நிறைய பறவைகள் சத்தம் கேட்க ஆரம்பித்தன.நாங்கள் ஓரிடத்தில் நின்று பறவைகள் பார்த்துக்கொண்டிருந்தபோது டொக் டொக் என்று சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் தேடிய பின்பு , ஒரு ஆரஞ்சு முதுகு மரங்கொத்தி(Orange-backed woodpecker) ஒரு அறையிலுள்ள கண்ணாடியை 2 தடவை கொட்டிக்கொண்டு , மரத்தில் இரண்டு கொட்டு என்று திரும்ப திரும்ப அதே செயலை செய்துகொண்டிருந்தது.

இந்த மாதிரி பறவைகளின் செயலை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். காலையில் தங்கும் இடத்தில் பெரிய அளவில் உணவு வகைகள் இல்லாததால் நாங்கள் டாமன் நெகரா செல்லும் வழியில் உணவு உண்ணலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் அதிகாலையிலிருந்து பறவைகளின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்ததால் எங்களுக்கு கொஞ்சம் பசிக்க ஆரம்பித்தது. நான் வீட்டில் கடைசிநிமிடத்தில் செய்த பிரௌனியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தோம். பயணத்தில் இது ஒரு அனுகூலம், இந்த நேரத்தில் இந்த உணவை தான் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் கிடைத்த, பிடித்த உணவை எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணலாம் !!

பொதுவாக தகைவிலான் பறவை உயர பறந்து கொண்டே இருக்கும், இங்கே ஒரு ஜோடி கூடு கட்டிக்கொண்டிருந்ததால் அங்கங்கே வந்து எதையாவது எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தன. பாதையில் தேங்கியிருந்த நீர் அருகே எங்களை கண்டுகொள்ளாமல் தரையில் வந்தமர்ந்து பறந்து சென்றன, இவ்வளவு அருகில் பறவையை பார்த்தவுடன் என் மகளுக்கு ஒரே குஷி.

நான் அவள் பின்னே ஓடிக்கொண்டிருந்த போது ,வினோத் ஒரு சிறிய மேட்டை தாண்டி பறவைகளை காண சென்றார். சில நிமிடங்களில் மதி சீக்கிரம் வா என்று கத்தினார். அவர் குரலின் அவசரத்தில் எனக்கு ஏதோ முக்கியமான பறவை என்று புரிந்தது.
கையில் பிரௌனி டப்பா , குழந்தை, ஒரு கேமரா எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு குடுகுடுவென்று ஏறி சென்றால், வினோத் அங்கே இருந்த ஒரு ஓடையின் அந்த பக்கம் பார்க்க சொன்னார். நான் ஏதோ மீன்கொத்தி பறவை போல என்று தேடினேன், ஏனென்றால் அங்கே உள்ள மீன்கொத்தி பறவையெல்லாமே எங்களுக்கு புதியது. ஆனால் நான் பார்த்தது கருஞ்சிவப்பு அகன்ற அலகு ( Black-and-red broadbill ) பறவை.

அழகிய வண்ணங்கள் கொண்ட இந்த பறவையை அடர்ந்த காட்டில் , டாமன் நகரா பகுதியில் பார்க்க வாய்ப்பிருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்த பறவையை எங்களுக்கு இங்கேயே பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. வினோத் முதலில் ஜோடியாக பார்த்திருக்கிறார் , நான் வருவதற்குள் ஒரு பறவை பறந்து விட்டது. இந்த பறவையை பார்த்த மகிழ்ச்சியுடன் அடுத்து நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்புடன் வந்த டாமன் நகரா தேசிய பூங்காவிற்கு கிளம்ப ஆரம்பித்தோம்.